

சென்னை,
ஒரு சில ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயல்களால் உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளின் புனிதமும், நம்பிக்கையும் சீர்குலைவது வேதனையளிக்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர்க்கு வழங்கப்படும் முட்டை உள்ளிட்ட உணவினை சுகாதாரமற்ற முறையிலும், மனிதாபிமானமின்றியும் வழங்கப்படுவதாகக் கூறும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவர்கள் என்றால் அவ்வளவு கீழ்த்தரமாகப் போய்விட்டார்களா?
ஏற்கனவே பல அரசு மருத்துவமனைகளில் எலிகள் தொல்லை மற்றும் சுகாதாரமற்ற சூழல் நிலவும் நிலையில் தற்போது சிகிச்சை பெறுவோர்களுக்கு இதுபோன்று உணவினை வழங்கும் போது அவர்கள் உடல் நோயுடன் மன அழுத்தமும் அதிரிக்கும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எத்தனை நவீன வசதிகள், கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிகிச்சை பெறுவோரிடம் கனிவுடன் நடந்து கொண்டாலே அவர்களின் பாதி நோய்க்கு அதுவே மருந்து. ஆனால் ஒரு சில ஊழியர்களின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் உயிர்காக்கும் அரசு மருத்துவமனைகளின் புனிதமும், நம்பிக்கையும் சீர்குலைவது வேதனையளிக்கிறது.
எனவே அரசு மருத்துவமனைகளில் இதுபோன்று நடக்கும் அவலங்களைக் கருத்தில் கொண்டு சிகிச்சை பெறுவோரை கண்ணியமாகவும், கனிவுடனும் நடத்த மக்கள் நல்வாழ்வு & சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.