

சென்னை,
இது குறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவைக் கட்சித்தலைவர்கள் கூட்டம் 13.05.2021 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக பின்வரும் தீர்மானம் (தீர்மானம் எண்.4) நிறைவேற்றப்பட்டது.
'நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டப்பேரவை கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது'
2. மேலே தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், அனைத்து சட்டப்பேரவை கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வரின் தலைமையில் பின்வரும் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.
3. மேற்படி ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு:-
1. மருத்துவர் நா.எழிலன்(திமுக)
2. மருத்துவர் சி. விஜய பாஸ்கர்(அதிமுக)
3. ஏ.எம். முனிரத்தினம்(காங்கிரஸ்)
4. ஜி.கே. மணி(பாமக)
5. நயினார் நாகேந்திரன்(பாஜக)
6. மருத்துவர் தி. சதன் திருமலைக்குமார்(மதிமுக)
7. எஸ்.எஸ். பாலாஜி(விடுதலை சிறுத்தைகள் கட்சி)
8. வி.பி. நாகை மாலி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
9 தி. ராமசந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
10. முனைவர் ஜவாஉறிருல்லா(மனித நேய மக்கள் கட்சி)
11. ரா.ஈஸ்வரன்(கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி)
12. தி.வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமை கட்சி)
13. பூவை ஜெகன் மூர்த்தி(புரட்சி பாரதம்)