

சென்னை,
கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.
அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாக செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.