

சென்னை,
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், வருகிற 2022ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, இத்தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள். கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு. உப்பு ஆகிய மளிகை பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ஓராயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு, பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.