சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை காணொலியில் பார்த்து வியந்த அரசு பள்ளி மாணவர்கள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அரசு பள்ளி மாணவர்கள் காணொலியில் பார்த்து வியந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை காணொலியில் பார்த்து வியந்த அரசு பள்ளி மாணவர்கள்
Published on

நீதிமன்ற நடவடிக்கைகளை செல்போன்கள் உள்ளிட்ட எந்த உபகரணத்திலும் காட்சியாக பதிவு செய்ய முடியாது. அதனால் வக்கீல்கள் கூட நீதிமன்றங்களுக்கு செல்லும் போது தங்களது செல்போன்களை அணைத்து வைத்துவிட்டே நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பணி நிறைவு பெறும் நாளில் அவர் விசாரணை செய்யும் முக்கிய வழக்குகளை நேரலையில் அனைவரும் காணலாம் என்று அதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் காணும் லிங்கை பயன்படுத்தி பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் நேரலையில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்து ஸ்மார்ட் டி.வி. மூலம் காண்பித்தனர். 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரணை செய்த காட்சிகளை வியந்து பார்த்தனர். இது குறித்து மாணவர்கள் கூறும் போது, இதுவரை நீதிமன்ற காட்சிகளை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று (நேற்று) தான் சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணைகளை காணொலி மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்று வியந்து கூறினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com