3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கைதான ஆசிரியர் மீது ஏற்கனவே போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த புகார் உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பாலகிருஷ்ணன் (வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பள்ளியில் 7, 8-ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, வட்டார கல்வி அலுவலர் சுதா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான ஆசிரியர் பாலகிருஷ்ணன் மீது ஏற்கனவே போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது உள்பட பல்வேறு புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






