

சென்னை,
மாணவர்களின் நலனில் அரசு சமரசம் செய்யக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள அரசுப் பள்ளியில் கழிவறையின் இரும்புக் கதவை திறக்கச் சென்ற 9 மாணவர்கள் மீது மின்சாரம் தாக்கியதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. தெய்வாதீனமாக அக்குழந்தைகளுக்கு பெரிதளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது சற்று மன ஆறுதல் அளித்தாலும் கூட, அரசுப் பள்ளிகளில் தொடரும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் உங்கள் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
இந்த நிலையில் கடந்த இடைக்கால பட்ஜெட்டை விட, இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதியை சுமார் ரூ. 4000 கோடி வரை குறைத்துள்ளீர்கள். அதிலும், தமிழகத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், பள்ளிக்கு வெறும் ரூ.1,39,000 என்ற கணக்கில் 10,000 பள்ளிகளை மட்டும் தேர்ந்தெடுத்து “சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ்” என்ற திட்டத்தை நீங்கள் அறிமுகப்படுத்தியிருப்பது முழுக்க முழுக்க விளம்பர அறிவிப்பு மட்டுமே.
காரணம், தமிழகத்தின் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. ஒரு பள்ளியில் இரண்டு கழிவறைகளை கட்டுவதற்கே சில லட்சங்கள் செலவாகும், தூய்மைப் பணியாளர்கள், வாட்ச்மேன் உள்ளிட்டோருக்கு ஊதியமே குறைந்தது ரூ.10000 வழங்க வேண்டியிருக்கும், Drinking water station அமைக்க குறைந்தது ரூ.25,000 செலவாகும். அப்படியிருக்கையில் நீங்கள் ஒதுக்கியுள்ள நிதி, கடலில் போட்ட உப்புக்கல் போன்றது.
எனவே, அசம்பாவிதம் நடந்த பிறகு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு, அவற்றை மேம்படுத்துவதற்கான பிரத்யேக திட்டத்தை அரசு முன்மொழிய வேண்டும்! “Money leakage”ஐ கட்டுப்படுத்துகிறோம் என்ற பேர்வழியில் மாணவர்களின் நலனில் அரசு சமரசம் செய்யக் கூடாது!
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.