அரசு நிகழ்ச்சி; திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு

அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசு நிகழ்ச்சி; திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
Published on

சென்னை,

கோவை மாவட்டம், உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 'நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எவரும் தேர்வு செய்யப்படவில்லை.

ஆனால், கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான பையா ஆர்.கிருஷ்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி போல, அரசு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி வருகிறார். கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் தலைமையேற்று, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். இது சட்டவிரோதம் என்பதால், அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், தலைமையேற்கவும் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துகுமார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்தார்.

வழக்கமாக, அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற போதும், இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்ட செயலாளருக்கு தடை விதித்து உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com