தமிழக கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும்- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா நிலுவையில் இருப்பதற்கு கவர்னர் தான் பொறுப்பு என டி.ஆர். பாலு எம்.பி கூறினார்.
தமிழக கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும்- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், நீட் தேர்வு மசோதா இன்னும் ஆளுநரின் பரிசீலனையில்யே உள்ளது. மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எனினும் கவர்னர் தரப்பில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில், மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மாளிகை அலுவலகம் சென்று ஜனாதிபதியின் செயலாளரிடம் மனு கொடுத்தனர். பின்னர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தொடர்ந்து முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்காமல் கால தாமதம் செய்தார். இதனால், உள்துறை அமைச்சகத்தில் மனு அளித்தனர். அதில், நீட் மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுபற்றி பேசிய டி.ஆர்.பாலு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா நிலுவையில் இருப்பதற்கு கவர்னர் தான் பொறுப்பு. எனவே, சட்டத்தை மதிக்காத கவர்னர் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க 3வது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com