5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

5 நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஊட்டி செல்கிறார்.
5 நாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை,

நீலகிரி மாவட்டம் ஊட்டி லோக்பவனில் (கவர்னர் மாளிகை) கடந்த ஏப்ரல் மாதம் 25, 26-ந் தேதிகள் என 2 நாட்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி கல்வி குறித்து பேசினார். இந்த சுற்றுப்பயணத்துக்கு பின்னர், இந்த மாத தொடக்கத்தில் கவர்னர் ஊட்டி வருவதாக இருந்தது. அந்த பயணம் திடீரென நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக இன்று (புதன்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். இதற்காக ராமேசுவரத்தில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் புறப்பட்ட கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 10.10 மணியளவில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இரவு அங்கு ஓய்வெடுத்தார். அவர் இன்று காலை 7 மணிக்கு காரில் புறப்பட்டு ஊட்டி லோக்பவனுக்கு வருகிறார். தொடர்ந்து அங்கு ஓய்வெடுக்கிறார்.

பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் உள்ள சில இடங்களுக்கு குடும்பத்தினருடன் சுற்றி பார்க்க செல்ல உள்ளதாக தெரிகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் ஊட்டியில் இருந்து கவர்னர் கார் மூலம் புறப்பட்டு கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

3-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் ஊட்டி லோக்பவனுக்கு வருகிறார். 4-ந் தேதி சுற்றுப்பயணம் முடிந்து கவர்னர் ஆர்.என்.ரவி மீண்டும் ஊட்டியில் இருந்து கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com