காரல் மார்க்ஸ் பற்றி பேசுவதை கவர்னர் நிறுத்த வேண்டும் -முத்தரசன் அறிக்கை

காரல் மார்க்ஸ் பற்றி பேசுவதை கவர்னர் நிறுத்த வேண்டும் முத்தரசன் அறிக்கை.
காரல் மார்க்ஸ் பற்றி பேசுவதை கவர்னர் நிறுத்த வேண்டும் -முத்தரசன் அறிக்கை
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆயிரமாண்டுகளில் தோன்றிய அறிஞர்களில் தலைசிறந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என அறிவுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை அறியாத தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, "காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது" என பேசி இருப்பது அவரது அறியாமையின் உச்சத்தை காட்டுகிறது.

தமிழ்மொழி மற்றும் சமூகம் குறித்தும், இந்திய மாநிலங்களில் நிலவி வரும் தனித்துவம் வாய்ந்த சமூக உறவுகள் குறித்தும் அடிப்படை புரிதல் இல்லாதவர் தமிழ்நாட்டின் கவர்னராக வந்திருப்பது வரலாற்று துயரமாகும்.

சாதி அடுக்குமுறை சமூக அமைப்பில், மனிதர்களை பிளவுபடுத்துவதற்காகவே, மதவெறியை மூட்டிவிடும் மூடத்தனத்தின் 'முகவர்கள்', சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டிய அறிவு ஆசான் காரல் மார்க்ஸ் மீது அவதூறு பொழிவது புதிதல்ல.

வர்க்க பேதமில்லாத, சாதி, மத வேற்றுமைகள் இல்லாத, நிகரற்ற மனிதநேய சமூகம் அமைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை உலகத்திற்கு அறிவித்த மேதை காரல் மார்க்ஸ் குறித்து விஷமத்தனமாக பேசுவதை கவர்னர் ரவி இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com