கவர்னரின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி

கவர்னரின் நடவடிக்கைகளினால் ஏற்படுகிற எதிர்ப்பில் தமிழக பா.ஜ.க. கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கவர்னரின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தமிழக சட்டப்பேரவையில் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையோடு தொடங்க வேண்டும் என்ற மரபின் அடிப்படையில், கவர்னர் ஆர்.என். ரவி அழைக்கப்பட்டிருந்தார். கவர்னர் உரையும், அவருக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், உரையாற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு வந்த அவர், தமது உரைக்கு பிறகு தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்தது மிகுந்த கண்டனத்துக்குரியது.

சட்டப்பேரவைக்கு அவரை அழைத்து வரும்போது தேசிய கீதம் இசை வடிவில் ஒலிபரப்பப்பட்டு, முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. உரை முடிந்து இறுதியில்தான் தேசியகீதம் பாடப்படும். அந்த மரபுக்கு மாறாக, தமிழக கவர்னர் நடந்து கொண்டது தேசிய கீதத்தையே அவமதிக்கிற செயலாகும்.

தமிழக கவர்னரை பொறுத்தவரை நியமிக்கப்பட்டது முதற்கொண்டு, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் நடத்திக் கொண்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். மகாத்மா காந்தியில் தொடங்கி எவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. அவரது நடவடிக்கைகளை பார்க்கிறபோது, கவர்னர் பதவிக்கே ஒரு அவமானச் சின்னமாக திகழ்கிறார்.

கவர்னர் மாளிகையிலிருந்து அவர் என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நன்னாளாகக் கருதப்பட வேண்டும். அந்த அளவுக்கு தமிழக மக்களின் வெறுப்புக்கும், கசப்புக்கும் ஆளாகியிருக்கிற கவர்னரின் நடவடிக்கைகளுக்கு பாடம் கற்பிக்கிற வகையில், தமிழகத்தில் பாஜகவை மக்கள் வெறுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏதோவொரு வகையில் கவர்னரின் நடவடிக்கைகளினால் ஏற்படுகிற எதிர்ப்பில் தமிழக பா.ஜ.க. கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கவர்னர் மீது தமிழக மக்களுக்கு கடும் வெறுப்புதான் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக கவர்னரின் அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறேன். என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com