வள்ளலார் குறித்த கவர்னரின் கருத்து அறியாமையை காட்டுகிறது -அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வள்ளலார் குறித்த கவர்னரின் கருத்து அறியாமையை காட்டுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வள்ளலார் குறித்த கவர்னரின் கருத்து அறியாமையை காட்டுகிறது -அமைச்சர் சேகர்பாபு பேட்டி
Published on

வேலூர்,

பொதுவுடமை, பொதுஅறிவு மட்டுமின்றி இயற்கையின் மருத்துவத்தையும் கண்டவர் வள்ளலார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர் அவர். அத்தகைய மாமனிதர் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.

தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்து சமய அறநிலையத்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. வேறெந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு இத்துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவது தி.மு.க. ஆட்சியில் மட்டும்தான். அதனாலேயே, எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியில் கோவில்களுக்கு கூட்டம் அதிகரித்திருப்பதுடன், உண்டியல் வசூலும், வைப்பு நிதியும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

வெளிப்படைத்தன்மை

மேலும், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்துசமய அறநிலையத்துறையில் இதுவரை 64 பேர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்டிருப்பதுடன், தேர்வு செய்யப்பட்டுள்ள 84 பேரை விரைவில் பணியமர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி இருந்த செயல்அலுவலர், உதவி ஆணையர், துணை ஆணையர் பொறுப்புகளில் இருந்த 180 பேருக்கு உதவி ஆணையர், துணைஆணையர், இணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பதுடன், நேரடி கவுன்சிலிங் முறையில் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். விரைவில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

ரோப்கார் வசதி

சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோவிலில் ரோப்கார் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com