கொடைக்கானல் அருகே ஓடையில் வீசப்பட்ட அரசு தரப்பு தபால்கள் - தபால்காரர் மீது கடும் நடவடிக்கை...!

கொடைக்கானல் அருகே ஓடையில் வீசப்பட்ட அரசு தரப்பு தபால்கள் - தபால்காரர் மீது கடும் நடவடிக்கை...!

கொடைக்கானல் அருகே அரசு சம்பந்தப்பட்ட தபால் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பதிவு தபால்கள் சாலையோரத்தில் உள்ள ஓடையில் வீசப்பட்டுள்ளது.
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குளிர் பிரதேச நகரமாகும், இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அரசு துறை சம்மந்தப்பட்ட தபால்கள் மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பதிவு தபால்களில் வருவது வழக்கம்.

இந்நிலையில் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் அருகே சாலையின் ஓரத்தில் உள்ள ஓடை பகுதியில் ஆதார் அடையாள அட்டைகள், பான் அட்டைகள், அரசு பணிகள் குறித்த தபால்கள், நகை கடன் ஏலம் குறித்த தபால்கள் உள்ளிட்ட முக்கிய பதிவு தபால்கள் குப்பை போல் குவிந்து காணப்பட்டுள்ளது.

இதுகுறித்து இச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் போலீசாக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சாலையோரம் ஓடையில் கிடந்த 500-க்கும் மேற்பட்ட தபால்களை மீட்டு கொடைக்கானல் தலைமை தபால் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும். இந்த தபால்களானது கடந்த 3 மாதத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட தபால்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த தபால்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்காமல் சாலையின் ஓரத்தில் வீசப்பட்டதால் தபால்களை குறித்த விவரங்கள் தெரியாத காரணத்தினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும், பதிவு செய்த தபால்களை பொதுமக்களிடம் ஒப்படைக்காத தபால்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com