ரூ.5½ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

திண்டுக்கல்லில் ரூ.5½ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
ரூ.5½ லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சியை அடுத்த சடையம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மோகன் (வயது 30). இவர், கரூரில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 5.11.2018 அன்று இவர், கோவையில் இருந்து கரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோகன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மோகனின் தந்தை சுப்பிரமணி, தாயார் கருப்பாயி ஆகியோர் தங்களுக்கு இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களின் தரப்பில் வக்கீல் சாக்ரடீஸ் ஆஜராகி வாதாடினார். நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்தார்.

பின்னர் விபத்தில் பலியான மோகனின் பெற்றோருக்கு இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 367 வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் மோகனின் பெற்றோர், நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கோவை செல்வதற்காக நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com