பல்லாவரம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை - மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்

பல்லாவரம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல்லாவரம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை - மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்
Published on

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி. நகரை சேர்ந்த பட்டதாரி பெண் பசிலத்காத்தூன் (வயது 34). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜமீல்அகமது (36) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயது மற்றும் 5 மாதத்தில் என 2 பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பசிலத்காத்தூன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பசிலத்காத்தூனின் தாயார் ஹசினா, சங்கர்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் மேலும் கூறி இருப்பதாவது:-

பசிலத்காத்தூனுக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்ததால் கணவர் ஜமீல்அகமது மற்றும் மாமியார் ஷகிலா இருவரும் சேர்ந்து தினமும் அவளை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தனர். ஜமீல் அகமது வாங்கிய ரூ.20 லட்சம் கடனை அடைக்க எங்களிடம் பணம் கேட்டும் எனது மகளை கொடுமைப்படுத்தினர். அவர்கள் 2 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் பசிலத்காத்தூனின் கணவர் மற்றும் மாமியாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பசிலத்காத்தூனுக்கு திருமணமாகி 6 வருடமே ஆவதால் இதுபற்றி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com