மகா காளியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

மேல்வாலை கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகா காளியம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
Published on

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா மேல்வாலை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் வன காளியம்மன், அக்னிவீரன், ஆத்திலியம்மன், சப்தகன்னிகள், முனீஸ்வரன் ஆகிய சன்னதிகளும் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 4-ம் ஆண்டு மயானக்கொள்ளை விழா சிறப்பாக நடைபெற்றது.

மயானக்கொள்ளை

இதையொட்டி கத்தி, சூலம், கபாலம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கையில் ஏந்தியவாறு 18 கரங்களுடன் மயான காளியாய் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் சிலர், அங்காளம்மன், காளி, காத்தவராயன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயானத்திற்கு வந்து அங்கு படையலிட்டு தாங்கள் கொண்டு வந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களை அம்மன் மீது வீசி கொள்ளையிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதில் மேல்வாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மேல்வாலை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com