

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தில் பசுமை காடு வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை வளர்த்து வைத்துள்ள சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகள் இன்று வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட விடவில்லை. வேளாண்துறையினரின் அலட்சியம் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வனத்துறையினர் வளர்க்கும் மரக்கன்றுகளை வேளாண்துறையினர் தான் பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், அந்த பணியை வேளாண்துறையினர் செய்யாததால் மரக்கன்றுகளை தனியார் கூலித் தொழிலாளிகளை வைத்து பராமரிப்பது சிரமமாக இருப்பதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
வனத்துறை வளர்த்து வைத்துள்ள வேங்கை, மகாகனி, பூவரசன் போன்ற மரக்கன்றுகள் விரைவாக வளர்ந்து நிழல் தரக் கூடியவை ஆகும். இவை அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்யக் கூடிய தன்மை கொண்டவை. மரங்களை நட்டு வளர்க்க மக்கள் தயாராக இருக்கும் நிலையில், அவற்றை மக்களிடம் வழங்க வேளாண்துறை தாமதிப்பது முறையல்ல.
வனத்துறை வளர்த்து வைத்துள்ள மரக்கன்றுகளை வேளாண்துறை பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும். வேளாண்துறை முன்வராத நிலையில், வனத்துறை கேட்டுக் கொண்டால் அம்மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்க காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க.வும், பசுமைத்தாயகம் அமைப்பும் தயாராக உள்ளன என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.