சேலம் புதிய பஸ்நிலையத்தில் ரூ.78 லட்சத்தில் பசுமை வெளி பூங்கா-இன்று திறக்கப்படுகிறது

சேலம் புதிய பஸ்நிலையத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.78 லட்சத்தில் அமைக்கப்பட்ட பசுமை வெளி பூங்கா இன்று திறக்கப்படுகிறது.
சேலம் புதிய பஸ்நிலையத்தில் ரூ.78 லட்சத்தில் பசுமை வெளி பூங்கா-இன்று திறக்கப்படுகிறது
Published on

பசுமை வெளி பூங்கா

சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, நெல்லை, திருச்சி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் இரவு, பகல் என எந்த நேரத்திலும் பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில், சில நேரங்களில் பஸ்சுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருவதாலும், அவர்கள் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து பொழுதை கழிக்கும் வகையிலும் மாநகராட்சி சார்பில் பசுமை வெளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பஸ் நிலைய வளாகத்தில் டவுன் பஸ்கள் வந்து செல்லும் காலி இடத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.78 லட்சம் செலவில் பசுமை வெளி பூங்கா அமைக்கும் பணிகள் நடந்தது.

விளையாட ஊஞ்சல்

இந்த பசுமை வெளி பூங்காவிற்குள் குழந்தைகள் அமரும் இருக்கைகள், விளையாடுவதற்கு ஊஞ்சல், பெரியவர்கள் அமரும் இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பூங்காவிற்குள் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் புல்தரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சூரமங்கலம் மண்டல உதவி ஆணையாளர் செல்வராஜ் கூறியதாவது:-

சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பசுமை வெளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பஸ்சுக்காக நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்காமல் இங்கு வந்து அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். இதற்காக பூங்காவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்கு நிறைய உபகரணங்கள் உள்ளன.

விரைவில் திறப்பு

வெளியூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்காமல் இந்த பூங்காவிற்கு வந்து அமர்ந்து ஓய்வெடுக்கலாம். பூங்கா அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டது. இந்த பூங்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com