

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது60). இவர் முத்தையாபுரத்தில் உள்ள தனியார் குடோனில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும், இவர் கடந்த சில வருடங்களாக குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இவர் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.