

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அமுதா (55 வயது). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டின் மாடியில் ஏறி, அதனை ஒட்டியபடி உள்ள மரத்தில் கொய்யாப்பழம் பறித்துள்ளார். அந்த சமயத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் விளிம்பில் மிதித்தபோது உடைந்து விட்டதாக தெரிகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அமுதா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அமுதா நேற்று பரிதாபமாக இறந்தார்.
மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொய்யாப்பழம் பறித்த பெண், மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.