இரவுநேர, முழுநேர ஊரடங்கின்போது போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கின்போதும், மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கின்போதும் போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரவுநேர, முழுநேர ஊரடங்கின்போது போலீசார் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
Published on

சென்னை,

அடையாள அட்டையை காண்பித்தால்...

1. மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், கோர்ட்டு, கோர்ட்டு தொடர்பான பணியில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொதுப் போக்குவரத்து ஆகியவற்றின் அலுவல்களுக்காக பயணம் செய்வோர் உரிய அடையாள அட்டையை காண்பித்தால், அவற்றை பார்வையிட்டு அனுமதிக்க வேண்டும்.

2. அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த அனைத்து சேவைகள், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு மற்றும் எரிபொருள் வாகனங்களில் பணிபுரிவோரின் அடையாள அட்டையை பார்வையிட்டு உடனே அனுமதிக்க வேண்டும்.

விவசாய பொருட்கள்

3. சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் விவசாய விளைபொருட்கள், காய்கறி, பழங்கள், கறிக்கோழிகள், முட்டை போன்ற பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

4. உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல்தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவன பணியாளர்கள் அடையாள அட்டையை காண்பித்தால் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

உணவகங்கள்

5. ஞாயிறு முழு ஊரடங்கின்போது உணவகங்களில் பார்சல் சேவைகளை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை அனுமதிக்க வேண்டும். உணவு டெலிவரி செய்யும் மின்வணிக நிறுவன பணியாளர்களை மேற்குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

6. மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணைய நிறுவனங்களின் நுழைவுத்தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகளுக்கு செல்வோர் உரிய அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின்போது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை கவனத்தில்கொள்ள வேண்டும்.

7. விமானம், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளையும், அவற்றில் இருந்து வீடுகளுக்குச் செல்லும் பயணிகளையும் அனுமதிக்க வேண்டும். இவர்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

கிராமப்புறத்தில்...

8. கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாயப்பணிகளுக்காக செல்பவர்களை அனுமதிக்க வேண்டும். அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணிமுடிந்து சொந்த ஊருக்குச் செல்பவர்களை அனுமதிக்க வேண்டும்.

9. வாகன சோதனை செய்ய வேண்டியிருந்தால், கையுறை அணிந்து கொள்ளவேண்டும். கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டிகளிடம் கனிவாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

வெளிச்சமான இடத்தில்...

10. இரவு வாகன சோதனையை வெளிச்சம் உள்ள இடங்களில் வைத்து நடத்த வேண்டும். போலீசார் தடுப்பான்கள் அமைத்து, ஒளிரும் மேல் சட்டை அணிந்து, பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com