

மதுரை,
எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டிய மாத உதவித்தொகையை நிலுவையுடன் உடனடியாக வழங்க அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு 2019-ம் ஆண்டில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பரிசோதித்ததில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்த ரத்தம் ஏற்றியது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தார். இதேபோல மதுரையை சேர்ந்த அப்பாஸ் மந்திரி, வக்கீல் எஸ்.முத்துகுமார் உள்ளிட்டோர் கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்ப்பிணிக்கு முறையான சிகிச்சையை மதுரை அரசு மருத்துவமனையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அந்த பெண்ணுக்கு வீடு வழங்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பெண்ணின் உடல் ஆரோக்கிய தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மாத உதவித்தொகை ரூ.7,500-ஐ சில மாதங்கள் மட்டுமே வழங்கி உள்ளனர். பின்னர் அந்த தொகையை நிறுத்தி விட்டனர். இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றனர்.
இதை கேட்ட நீதிபதிகள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆரோக்கிய தேவைகளுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டதை நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பி தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
முடிவில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.