

சென்னை,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் நடத்தி வரும் கடையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி சிலர் சோதனை நடத்துவதற்காக வந்துள்ளனர். அந்த நபர்கள் பிரவீன் குமாரை மிரட்டி, கடையில் இருந்த 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு பிரவீன் குமார் கேட்டபோது, அந்த நபர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதையடுத்து பிரவீன் குமார் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கடைக்கு வந்தவர்களில் ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் ரவிவர்மன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவிவர்மனையும், அவருடன் கூட்டாக செயல்பட்ட மங்கிலால் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.