

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி புலவன்விளையை சேர்ந்தவர் ஜாஸ்பர் சுபின் (25 வயது), பெயிண்டர். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி ஒரு மாதத்துக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் ஜாஸ்பர் சுபின் மிகுந்த மனவேதனையில் இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜாஸ்பர் சுபின் உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் தூங்க சென்றார். நள்ளிரவில் அவரது தாயார் அறைக்குள் சென்றபோது ஜாஸ்பர் சுபின் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஜாஸ்பர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.