

சென்னை,
கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தனியார் அலுவலகங்கள், ஐ.டி நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அந்தந்த நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது. அனாவசியமான பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள் பலர் வெளியூர்களுக்கு செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்டுகளை கடந்த சில நாட்களாக ரத்து செய்து வந்தனர். சில நாட்களாகவே ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு சில முன்பதிவு பெட்டிகளை தவிர அனைத்து பெட்டிகளிலும், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவில்லா பெட்டிகளிலும் வாசல் வரை பயணிகள் தொங்கி கொண்டு சென்றனர்.
ரெயில்களில் பயணம் செய்வதை சில நாட்களுக்கு தவிர்க்குமாறு தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெயில்களில் பயணம் செய்வதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது எனவும், எனவே பொது மக்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக, அதையும் மீறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.