

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குளிதிகை ஜமீன் பகுதியில் இன்று கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த அரசமரம் வேரோடு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து படிப்படியாக சீரடைந்தது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படாதது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையோரங்களில் உள்ள பழமையான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.