

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. நடப்பு ஆண்டில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென சாரல் மழை பெய்தது. இதன்பின்னர், நாள் முழுவதும் கனமழை பெய்தது.
இதன்படி, சென்னை எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதுதவிர, கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கனமழை எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 4 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறையை அறிவித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.