நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதி யில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த அமைப்பு வலுவடையா மல், அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதி களை நோக்கி நகரலாம். இதன் காரணமாக, நாளை முதல் வருகிற 13-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும், ஓரிரு இடங்களில் மிக கனமழை வரைக்கும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக கனமழை எச்சரிக்கை எதிரொலியாக முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும், பேரிடர்களை எதிர்கொள்ளவும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "நிலையான வழிகாட்டு விதிமுறைகளின்படி பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றும், "எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com