ஆலங்குடியில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஆலங்குடியில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆலங்குடியில் கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகும், உரிய மழை பொழிவு இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தினசரி பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு போதுமான மழை பொழிவு இருக்காதோ என்று அச்சத்திலும் இருந்து வந்தனர்.இந்நிலையில் நேற்று ஆலங்குடி, வடகாடு, கல்லாலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம், வம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குடி பகுதியில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கழிவு நீர் வெளியேறி மழை நீருடன் கலந்து சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்தனர். 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆலங்குடியில் பெய்த மழை அளவு 40 மி.மீ. ஆகும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com