

பந்தலூர்,
பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பந்தலூரில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவாலா, சேரம்பாடி, தாளூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சாலையோரங்களில் மண்சரிவு ஏற்பட்டது. பந்தலூரில் இருந்து அட்டி செல்லும் சாலையில் உள்ள குழியில் வெள்ளம் தேங்கி நின்றது. நேற்றும் பலத்த மழை பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர். மேலும் சாலையில் தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதியடைந்தனர். தொடர் மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பந்தலூரில் 7.2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.