

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ராசிமணல், அஞ்செட்டி, கேரட்டி ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இதனுடைய நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து. நேற்று பிற்பகல் மதியம் 2மணி நிலவரப்படி 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து மாலை 4 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது
இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செந்நிறத்தில் கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் கடந்த 12ஆம் தேதி முதல் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 6-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.