திருப்பத்தூரில் கனமழை: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி வறட்சியாக காணப்பட்டது.
திருப்பத்தூரில் கனமழை: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
Published on

திருப்பத்தூர்,

ஜவ்வாது மலையை ஒரு பகுதியாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை மறுபகுதியாகவும் எல்லையாக கொண்டு அமைந்த திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஆகியவை சுற்றுலா பயணிகளை கவரும் இடங்களாக உள்ளன.

ஏலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக இயற்கை மூலிகைகளுடன் தண்ணீர் கலந்து ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் அருவியாய் கொட்டுறது. இந்த அருவியில் குளித்து விட்டு சென்றால் தீராத நோயும் தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது. வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில், விடுமுறை நாட்களின்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.

இதனிடையே கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி வறட்சியாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு திருப்பத்தூரில் கனமழை பெய்ததை தொடர்ந்து, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் இன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையும் இன்று அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com