

திருவாரூர்,
திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக, சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
டெல்டா மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த திடீர் மழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், எரவாஞ்சேரி, வெள்ளை, அதம்பார் மற்றும் ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதில் கதிர்கள் முற்றி, இன்னும் சில நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் சாய்ந்து மூழ்கின.
"பயிர்களைக் காக்க கடுமையான உழைப்பையும் முதலீட்டையும் கொட்டிய நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த இந்த மழை மொத்த உழைப்பையும் வீணடித்துள்ளதாக" அப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். தேங்கியுள்ள மழைநீரை வடிக்க வழியின்றி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.
பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக நேரில் பார்வையிட்டு, சேத விபரங்களை துல்லியமாகக் கணக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு, விரைவில் வழங்கி உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.