கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on

சென்னை,

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் உள்ள 12 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;-

"மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், போதிய முன்னறிவிப்பின்றி, மக்கள் எதிர்பாராத நேரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது. இரவு நேரங்களில் தண்ணீர் வெளியேற்ற அளவை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள், நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

சில இடங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் வீணாவதாக செய்திகள் வருகின்றன. நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும். நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்களுக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com