நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல்வேறு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைக்கிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து பில்லூர் அணை வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வனப்பகுதி வழியாக வரும் மாயாறும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

நீர்வரத்து உயர்ந்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.51 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 486 கன அடி தண்ணீர் வந்தது.

நேற்று மதியம் 2 மணியளவில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 893 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 78.25 அடியாக உயர்ந்தது.

பவானி ஆற்றில் வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீரும் கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com