சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் கனமழை

சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் அதிகாலை முதல் கனமழை
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று அளித்த பேட்டியில், வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலுங்கானா வரை நீண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என கூறினார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில், எழும்பூர், புரசைவாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, முடிச்சூர், அடையார், குரோம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், மாதவரம், சோழிங்கநல்லூர் மற்றும் கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

இதேபோன்று சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், போரூர், நங்கநல்லூர் மற்றும் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அந்த மாவட்டத்திற்குட்பட்ட அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, பட்டாபிராம், பள்ளிப்பட்டு, திருவள்ளூர், திருத்தணி மற்றும் வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com