நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்து செல்ல வேண்டும்- போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் வந்து செல்ல வேண்டும்- போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
Published on

மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

கனரக வாகனங்கள்

நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்வண்ணம் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது குறித்து போக்குவரத்து துணை கமிஷனர் குமார் கூறியதாவது, மாசி வீதி, ஆவணி மூலவீதிகளில் உள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுவனங்களுக்குரிய வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். மேலும் வடக்கு ஆவணி மூல வீதியிலுள்ள வாகன நிறுத்தும் இடத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். கனரக சரக்கு வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே நகருக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தலைகவசம்

எனவே அந்த வாகனங்கள் அந்த நேரத்திற்குள் வந்து சென்று விட வேண்டும். அதில் விதி மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே விதி மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். நகரில் பெரும்பாலும் உயிரிழப்பு விபத்துகள் தலைகாயத்தால் ஏற்படுகிறது. எனவே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வண்டியை ஓட்டி செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

விபத்தில்லா போக்குவரத்து

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆடம்பரமாகவும், பகட்டாகவும் தெரிவதற்காக மோட்டார் சைக்கிள்களில் புகைபோக்கி. நம்பர் பிளேட், பம்பர் ஆகியவற்றை மாற்றம் செய்து அபாயகரமாகவும். அதிவேகமாக வும் சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் ஓட்டி செல்கிறார்கள். மேலும் அவர்கள் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே மாணவர்களின் பெற்றோர் இதற்கு இடம் கொடுக்காமல் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் போலீசார் சார்பில் சாலை சந்திப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் விழிப்புணர்வை நினைவூட்டி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.இதன் மூலம் மதுரை நகரில் விபத்தில்லா மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com