ஏரியில் மூழ்கி அக்காள், தங்கை பலி

திருப்பத்தூர் அருகே குளிக்க சென்றபோது அக்காள், தங்கை ஏரியில் மூழ்கி இறந்தனர்.
ஏரியில் மூழ்கி அக்காள், தங்கை பலி
Published on

அக்காள், தங்கை

திருப்பத்தூர் தாலுகா புதூர்பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். விசமங்கலம் பகுதியில் உள்ள பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு லட்சிகா (வயது 12), ரேஷ்மா (10) என இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இருவரும் புதூர்பூங்குளம் அரசு பள்ளியில் 5 மற்றும் 4-ம் வகுப்பு படித்து வந்தனர்.

பள்ளி விடுமுறை என்பதால் ஏ.கே.மோட்டூரில் உள்ள தனது பாட்டி ரஞ்சிதம் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் ரஞ்சிதம் காலையில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார். சிறுமிகளும் உடன் சென்றுள்ளனர். அப்போது ஆடுகள் அங்குள்ள ஏரிக்கு சென்றுள்ளது.

ஏரியில் மூழ்கி பலி

அதை விரட்டி விட்டு அக்காவும், தங்கையும் ஏரியில் குளிக்க இறங்கி உள்ளனர். அங்கு ஆழமாக இருந்துள்ளது. நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து வரும் வழியிலேயே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அக்காள்,தங்கை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com