

மதுரை,
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது;-
ஜனநாயக முறைப்படி நான், ஒன்றிய தலைவராக செயல்பட கலெக்டர், பிடிஓ உள்ளிட்டோர் அனுமதிப்பதில்லை. ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டத்திற்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நிதியை மாற்ற அதிகாரம் இல்லை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஊராட்சி ஒன்றிய பணிகளை முடக்கும் வகையில் உள்ளது. எனவே, நிதியை வேறு பணிக்கு பயன்படுத்தும் இணை இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, நிதியை மாற்றும் இணை இயக்குநரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, மனுவிற்கு கலெக்டர், ஊரக வளர்ச்சி இணை இயக்குநர், மணப்பாறை பிடிஓ ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணயை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.