

மதுரை,
மதம் மாறியவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்ட நடவடிக்கையை கோர முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ரவிக்குமார் என்பவர் பணியாற்றினார். பின்னர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த இந்துவான என்னை பள்ளி முதல்வர் உள்ளிட்ட சிலர் சேர்ந்து, சாதிய பாகுபாடு காட்டி அவமானப்படுத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்து உள்ளார். அதற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் மனுவில், நான் ஒரு இந்து என்று கூறியுள்ளார். கோர்ட்டில் வழக்கு தொடரும் நபர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்படும் சம்பவமானது வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். சம்பவம் பொது இடத்தில் நடந்திருக்க வேண்டும்.
ஆனால் மனுதாரர் புகாரில் தேதி, இடம் போன்றவை தெரிவிக்கப்படவில்லை. யார் முன்பு அவமானப்படுத்தப்பட்டார் என்பதை கூறவில்லை. தற்காலிக பணி நீக்கம், இடமாறுதல் போன்ற குற்றச்சாட்டுகள்தான் புகாரில் உள்ளன. நிர்வாக நடவடிக்கையை துன்புறுத்தல் எனக்கூறி போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட முடியாது.
சிறப்பு தண்டனை சட்டங்களை தவறாக பயன்படுத்துவது இரு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் இந்து மதத்தில் இருந்து மதம் மாறிய பிறகு மீண்டும் பழைய மதத்திற்கு திரும்பியதற்கான ஆதாரம் இல்லை என்றால் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.