எம்.டெக். மாணவர் சேர்க்கை குறித்த வழக்கில் தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

எம்.டெக். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த வழக்கில் தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.டெக். மாணவர் சேர்க்கை குறித்த வழக்கில் தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயாலஜி ஆகிய இரு பட்டமேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஆர்.சித்ரா என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக மத்திய அரசின் 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றிதால் தான் இந்த ஆண்டு இந்த 2 படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்ததாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி புகழேந்தி முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த 2 படிப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இருப்பினும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டுடன் சேர்த்து மாநில அரசின் இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தும்போது, கூடுதலாக 9 இடங்களை உருவாக்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அனுமதி தேவை என்று தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக விளக்கமளிக்கும்படி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு எம்.டெக். படிப்புகளை தொடங்குவதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்து விட்டதாகவும், அது உச்சநீதிமன்றம் அனுமதித்த காலக்கெடு என்பதால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த அரிதான சூழல் காரணமாக அண்ணா பல்கலைகழகமும், தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தை அணுகி காலநீட்டிப்பு கேட்கலாம் என்று நீதிபதி யோசனை தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி அண்ணா பல்கலைகழகத்திற்கும், தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று மதியம் 2.15 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com