சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்: பட்டதாரி வாலிபர் கைது

விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னை விமான நிலையத்தில்
Published on

ஆலந்தூர்,

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து வரும் விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விசாரணை

இந்த நிலையில் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று திரும்பிய சுமார் 25 வயதுடைய வாலிபரின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரது உடைமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்டன.

பறிமுதல்

அப்போது அவரது சூட்கேசில் துணிகளுக்கு இடையே 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொட்டலங்களை திறந்து சோதனை செய்தபோது, 4 கிலோ 76 கிராம் உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா கடத்தி வரப்பட்டிருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் பட்டதாரி என்றும், வேலைவாய்ப்பு இல்லாததால் பணத்திற்காக போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு துணையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com