

சென்னை,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பய ணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சுமார் 25 வயதுடைய மலேசிய நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒரு வரது உடைமைகளை சோதனை செய்தபோது, சூட்கேசுக்குள் துணிகளுக்கு மத்தியில் 4 பாக்கெட்டுகள் இருந்தது. அந்த பாக்கெட்டுகளை திறந்து சோதனை செய்தபோது, அதில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
மொத்தம் 4 கிலோ 33 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், மலேசிய வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பட்டதாரி என்பதும், வேலை இல்லாததால் பணத்துக்காக கஞ்சா கடத்தல் கும்பலுக்கு துணையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.