

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சங்கரன். இவரது இரண்டாவது மகன் சபரிராஜன் (45). இவர் ஒரு மாற்றுத்திறனாளி. மூலைக்கரைப்பட்டி தெற்கு பஜாரில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார்.
கடந்த 17-ம் தேதி, மூலைக்கரைப்பட்டியில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று பேரூராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சபரிராஜனின் டீக்கடைக்கும் வந்து சோதனையிட்டனர். அங்கு நடைபெற்ற சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதற்காக சபரிராஜனுக்கு ரூ. 200 அபராதம் விதித்தனர்.
மேலும் அந்த மாற்றுத்திறனாளியின் டீக்கடையில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் கல்லாப்பெட்டியை திறந்து அத்துமீறலில் ஈடுபட்டதாக வியாபாரிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். கல்லாப்பெட்டியைத் திறந்து அத்துமீறலில் ஈடுபட்ட இந்த செயலை கண்டித்து, மூலைக்கரைப்பட்டி வியாபாரிகள் சங்கம் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வியாபாரிகள் சங்க தலைவர் சத்தியசீலன் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் திரண்டு, நேற்று மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.