

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
கடந்த ஆட்சியின் போது பல்கலைக் கழகங்களின் வேந்தராக கவர்னருக்குப் பதிலாக மாநில முதல்-அமைச்சர் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதை அன்றைய கவர்னர் கிடப்பில் போட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்றைய அரசு வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த மசோதா சட்டமானது. அச்சட்டப்போராட்டத்தின் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் இது குறித்த முந்தைய அரசின் நிலைபாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளார். அவரது இக்கருத்து மத்திய பாஜக அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு வலுசேர்க்கிறது. எனவே அவர் தனது தவறான கருத்தியல் நிலைபாட்டை கைவிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.