சுங்கக்கட்டணத்திற்கு.. சேவையை நேர்மையுடன் நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிட வேண்டும் - வேல்முருகன்

குறைந்தபட்ச சேவையை நேர்மையுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடையின்றி வழங்கிட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
சுங்கக்கட்டணத்திற்கு.. சேவையை  நேர்மையுடன் நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிட வேண்டும் - வேல்முருகன்
Published on

சென்னை,

பயணிகளிடம் பெறப்படும் சுங்கக்கட்டணத்திற்கு குறைந்தபட்ச சேவையை நேர்மையுடன் தடையின்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிடவேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்வு

பயணியர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு உடனடி உதவிகளை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொள்ளவேண்டும். வாங்கும் சுங்கக்கட்டணத்திற்கு குறைந்தபட்ச நேர்மையுடன் தேசிய நெடுஞ்சாலையில் இச்சேவைகளை தடையின்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிட வேண்டும்.

இந்தியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கை நெடுஞ்சாலைகள் வகிக்கின்றன. ஸ்ரீநகர் தொடங்கி கன்னியாகுமரிவரை தற்போது நூற்றுக்கணக்கான நெடுஞ்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றை பராமரிக்க தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

சென்னை முதல் கன்னியாகுமரிவரை சுமார் 710 கிலோ மீட்டருக்கு செல்லும் என் எச் 44 தேசிய நெடுஞ்சாலை உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 4,974 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 2,724 கி.மீ நீள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 2,250 கி.மீ. நீள சாலைகள் பராமரிப்புக்காக தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. நாடு மூழுவதும் தேசியநெடுஞ்சாலைகளில் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்படுகின்றன. இது ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் தேதி சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும்.

மோசமாகவே உள்ளது

டோல் கட்டணத்தின் ஒருபகுதியை சாலை பராமரிப்பிற்கும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், பயணியரின் வசதிகளை கவனிப்பதற்கென்றே, ‘நேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், நீண்ட கால குத்தகை அடிப்படையில், நவீன சாலையோர வசதி மையங்களின் கட்டமைப்பை, இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.

ஆனாலும் சாலையோரம் குவிந்துள்ள மணல் மேடுகளை அகற்றப்படுவதில்லை. மேலும் சாலையில் அமைக்கபட்ட பேட்ச் ஒர்க் முறையாக செய்யப்படாததால், பயணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் உள்ள கழிவறைகள் முறையாக பராமரிக்காததால், உள்ளூர் பேருந்து நிலைய கழிவறையை விட சுகாதாரத்தில் மோசமாகவே உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை முழுதும் ஆங்காங்கே, குறிப்பிட்ட தூர இடைவெளிகளில், வாகனங்கள் பழுதுநீக்கும் நிலையங்கள் மற்றும் டயர் பஞ்சர்களை சரி செய்யும் கடைகளை அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில், பயண அனுபவத்தை மேம்படுத்துதல், வாகனங்கள் பழுதாகி நின்றுபோகும் நேரத்தைக் குறைத்தல், சாலைப் பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் பயணியர் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு உடனடி உதவிகளை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று சாலையோர வசதி மையங்களை, குத்தகைக்கு எடுத்துள்ளோருக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாங்கும் சுங்கக்கட்டணத்திற்கு குறைந்தபட்ச நேர்மையுடன் தேசிய நெடுஞ்சாலையில் இச்சேவைகளை தடையின்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com