தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட இந்து எழுச்சி முதல்-அமைச்சரை பணிய வைத்திருக்கிறது - வானதி சீனிவாசன்

யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு தப்பி விட முடியாது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியும், சென்னை ஐகோர்ட்டின் கண்டத்திற்கு ஆளான வனத்துறை அமைச்சர் க.பொன்முடியும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் வகித்து வந்த துறைகள், அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், எஸ்.முத்துசாமி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எந்த அரசாக இருந்தாலும் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது செய்திருக்கும் இந்த அமைச்சரவை மாற்றம் வழக்கமானது அல்ல. இந்த மாற்றம், முதல்-அமைச்சர் ஸ்டாலினின் விருப்பமும் அல்ல. நீதிமன்றங்களும், தமிழ்நாடு மக்களும் அளித்த கடும் நெருக்கடியால், வேறு வழியின்றி, செந்தில் பாலாஜியையும் பொன்முடியையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்கிறார்.

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு பலரிடம் பணம் வாங்கியதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில்தான், அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீன் கிடைத்த அடுத்த இரு நாட்களில் அவர் மீண்டும் அமைச்சரானார். இப்போது சுப்ரீம் கோர்ட்டு அவரின் ஜாமீனை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார்.

சைவமும், வைணவமும் தமிழ்நாட்டின் இருபெரும் அடையாளங்கள். பன்னிரு திருமுறைகளும், நாலாயிர திவ்யபிரபந்தமும் இல்லாமல் தமிழ் இல்லை. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இல்லாமல் தமிழர்கள் இல்லை. தமிழர்களின் இருபெரும் சமயங்களின் புனித குறியீடுகளை கொச்சைப்படுத்தி, ஆபாசமாக பொது மேடையில் பேசியவர் அமைச்சராக இருந்த பொன்முடி. அவரது அறுவெறுக்கத்தக்க ஆபாச பேச்சுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொந்தளித்த பிறகு, சென்னை ஐகோர்ட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட பிறகு, வேறு வழியின்றி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க.வுக்கு வந்தவர் பொன்முடி. திராவிடர் கழகம் துவங்கிய காலம் முதலே, இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும் ஆபாசமாக பேசி வருவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதே, பொன்முடி ஆபாச பட்டிமன்றங்களில் பேசியதை, அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். முன்பெல்லாம் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்தி பேசுவதை மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். அவர்கள் பேசுவது அதிகமான மக்களை சென்று சேராமல் இருந்தது. ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பொன்முடி போன்றவர்களின் ஆபாச முகம் அனைவரிடமும் சென்று சேர்ந்து, அவர்களது இந்து மத வெறுப்பை மக்களிடம் அம்பலப்படுத்தி இருக்கிறது. மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி விட்டோம் என்பதையும், அது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து, அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து மட்டுமல்லாது, அமைச்சரவையில் இருந்தும் முதல்-அமைச்சர் ஸ்டாலின் நீக்கியிருக்கிறார். இது அவரது விருப்பம் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட 'இந்து எழுச்சி', முதல்-அமைச்சர் ஸ்டாலினை பணிய வைத்திருக்கிறது. இந்த எழுச்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும். இது தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றம். இனி யார் மீதும், யாரும் வெறுப்பை உமிழ்ந்துவிட்டு தப்பி விட முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com