

பேட்டை:
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் தேசிய மாணவர் படை திட்டத்தில் கவுரவ கர்னல் கமாண்டன்ட் பதவி இந்த ஆண்டு நாடு முழுவதும் 11 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியும் ஒருவர் ஆவார். அவர் பதவியேற்கும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.
விழாவில் தமிழக தேசிய மாணவர் படை கட்டளை அதிகாரி கர்னல் பாபிஜோசப், லெப்டினன்ட் கர்னல் நிதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, துணைவேந்தர் பிச்சுமணிக்கு கவுரவ கர்னல் கமாண்டன்ட்டாக பதவி பிரமாணம் செய்து வைத்து, அதற்குரிய அதிகாரப்பூர்வ கடிதத்தையும் வழங்கினர்.
இதில் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை, ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக தேசிய மாணவர் படை அதிகாரி சிவகுமார் செய்திருந்தார்.