விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம்- சென்னை ஐகோர்ட்டு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம்- சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது.

தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை.விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷசாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் எனவும், இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com